செய்திகள்

திருப்பூரில் பனியன் அதிபர்களை மிரட்டி நவீன செல்போன்கள் பறிப்பு- 6 பேர் கைது

Published On 2018-04-12 15:15 GMT   |   Update On 2018-04-12 15:15 GMT
திருப்பூரில் பனியன் அதிபர்களை மிரட்டி நவீன செல்போன்களை பறித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர், ஏப்.12-

தொழில் நகரமான திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பனியன் அதிபர்கள், மானேஜர், சூப்பர்வைசர்கள் விலை உயர்ந்த நவீன செல்போன்களை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனை மற்றும் ஆர்டர்களை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்த செல்போன் வைத்திருக்கும் நபர்களை குறி வைத்து அவர்களிடம் பேச்சுக்கொடுப்பதுபோல் நடித்தும், தனியாக மற்றும் இருட்டு பகுதியில் பேசும்போது மிரட்டியும், வழிப்பறி செய்து வந்தனர். இது குறித்தான புகார்கள் குவிந்தன.

இந்நிலையில் திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் நாகராஜன் செல்போன் கொள்ளையர்களை மடக்கிப்பிடிக்க உத்தர விட்டார். இதனையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

சம்பவத்தன்று கோபி என்பவரது செல்போனை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் குறிப்பிட்ட செல்போன் உள்ள இடத்தை கண்டு பிடித்தனர். அதன்படி விசாரணை நடத்தியதில் கிருஷ்ணமூர்த்தி என்ற கல்லூரி மாணவரிடம் அந்த செல்போன் இருந்தது. செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதியதன் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்கள் பிரவீன்குமார் (வயது 19), முகமது அப்பாஸ் (19), கோபால் (20) ஆகிய கல்லூரி மாணவர்கள் மற்றும் சக்தி கார்த்திக் (24), பிரவீன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ஏராளமான விலை உயர்ந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை வழிப்பறி செய்து அதனை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினர்.

கைது செய்யப்பட்ட 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News