செய்திகள்

திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்துக்கொலை - மனைவி, மகனிடம் விசாரணை

Published On 2018-04-10 10:02 GMT   |   Update On 2018-04-10 10:02 GMT
திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). விவசாயி. இவரது மனைவி ராஜேஷ்வரி (40). இவர்களது மகன் பாண்டியன் (18).

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு ஏழுமலைக்கு அவரது மனைவி ராஜேஷ்வரி சாப்பாடு பரிமாறினார். அப்போது சாப்பாடு சரியில்லை என கூறி அந்த சாப்பாட்டை ஏழுமலை கீழே கொட்டினார்.

எதற்காக சாப்பாட்டை கீழே கொட்டீனீர்கள்? என கேட்ட ராஜேஷ்வரியை சரமாரியாக தாக்கினார். இந்த சத்தம் கேட்டு அவரது மகன் பாண்டியன் அங்கு ஓடிவந்து ஏழுமலை தடுத்தார். அப்போது பாண்டியனையும் ஏழுமலை தாக்கினார்.

இதில் ஆத்திரம் அடைந்த தாய்-மகன் 2 பேரும் சேர்ந்து ஏழுமலையை அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஏழுமலை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினசபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஷ்வரி, பாண்டியன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News