திருத்துறைப்பூண்டி அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த பிச்சன் கோட்டகத்தை சேர்ந்த காமாட்சி மகன் காமராஜ் (வயது 19) கல்லூரி மாணவர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் நண்பர்களான விஜேந்திரன் (20), அருள்தாஸ் (23) ஆகியோரும் சென்றனர். இவர்கள் பாமணி ஈ.சியார் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜேந்திரன், அருள்தாஸ் ஆகியோரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான காமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிவைரை கைது செய்து விசாரணை நடத்தினர்.