செய்திகள்

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-04-03 16:17 GMT   |   Update On 2018-04-03 16:17 GMT
ராயக்கோட்டை அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சூளகுண்டா அருகே உள்ள தேன்கல்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 10 ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது.

கடந்த 25-ந் தேதி பெரியசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், மனைவி லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பெரியசாமியின் மனைவி லட்சுமி கோபித்து கொண்டு தனது தாய் வீடான கீழ்நுக்கி கிராமத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பெரியசாமி தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியசாமி விஷத்தை குடித்து விட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவியிடம் நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறினார். பின்னர் சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பெரியசாமி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News