மதுரையில் டாக்டர் மனைவி உள்பட 2 பேரிடம் நகை பறிப்பு
மதுரை:
மதுரை டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). டாக்டரான இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு முத்துக்குமார் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். புதூர் சிப்காட் அருகே வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் முத்துக்குமார் மனைவியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தபால் தந்தி நகர் தாழம்பூ தெருவைச் சேர்ந்தவர் மனோகர் (63). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பீ.பி.குளம் உழவர்சந்தை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மனோகரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயின், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனையூர் டோபாஸ் மெயின்ரோட்டை சேர்ந்தவர் விஜயேந்திரன்(28). இவர் நேற்று அதிகாலை காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார்.
அப்போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.