செய்திகள்
எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை விழா- சென்னையில் கலைவாணர் அரங்கில் உற்சாக கொண்டாட்டம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. #edappadigovt
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி. மு.க. அரசு பதவி ஏற்று பிப்ரவரி 16-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
இவ்விழாக்களில், ரூ.5 ஆயிரத்து 127.11 கோடியில் முடிவுற்ற 2 ஆயிரத்து 329 திட்டப்பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். ரூ.5 ஆயிரத்து 712.90 கோடியில் 3 ஆயிரத்து 200 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 521 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ரூ.5 ஆயிரத்து 397.52 கோடியில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 481 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதே போல் அரசு விழா மற்றும் காணொலி காட்சி மூலமாக ரூ.11 ஆயிரத்து 827.34 கோடியில் 35 ஆயிரத்து 819 முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார். ரூ.8 ஆயிரத்து 837.29 கோடியில் 6 ஆயிரத்து 411 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்ட கடந்த ஓராண்டில் மட்டும் 5,208 கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், அரசு சார்பில் ஓராண்டு சாதனை விழா இன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். #tamilnews #edappadigovt