செய்திகள்

முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-03-12 01:21 GMT   |   Update On 2018-03-12 01:21 GMT
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே.மீர் முஸ்தபா உசேன். இவர் தனது பதவி காலத்தில் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு சென்றபோது, விமான டிக்கெட் எடுத்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் கூறப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘மனுதாரர் துணைவேந்தராக உயர் பதவி வகித்தவர். அவருக்கு, இந்த வழக்கின் குற்றச்சாட்டு புரியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக கீழ் கோர்ட்டில் மனு மீது மனு போட்டுள்ளார். எனவே இந்த வழக்கை கீழ் கோர்ட்டு தினந்தோறும் விசாரித்து, 4 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்’.
Tags:    

Similar News