தமிழகத்தில் புதிதாக 24 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி
சென்னை:
மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நாடு முழுவதும் எண்ணெய் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுகளை எடுத்து வருகிறது.
இது தவிர, தனியார் நிறுவனங்களும் இவற்றை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனம், எஸ்ஸார் நிறுவனம் உள்ளிட்டவை கச்சை எண்ணெய் எரிவாயுக்களை எடுத்து வருகிறது.
இதே போல் தனியார் நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும் எண்ணெய்- ஹைட்ரோ கார்பன், ஷெல் ஆயில் ஆகியவற்றை எடுக்க இப்போது புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலகில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் முறைப்படி டெண்டர் எடுத்து எண்ணெய், ஹைட்ரோ கார்பன் எடுத்து கொள்ளலாம். அவர்களே அதற்கான நிலத்தை தேர்வு செய்து அதில் கிணறு தோண்டி எடுக்கலாம்.
இந்தியாவில் எந்தெந்த இடத்தில் எண்ணெய் வளம், ஹைட்ரோ கார்பன் போன்றவை இருக்கிறது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் கடற்கரை பகுதி, காவிரி டெல்டா பகுதி, இமயமலை பகுதி, கங்கை, கோதாவரி, தாமோதர், காம்பே, ஆற்று பகுதி, கட்ச் வளைகுடா பகுதி உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் வளம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் மரக்காணத்தில் இருந்து தொடங்கி கன்னியாகுமரி வரை 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீட்டர் கடற்கரை மற்றும் வடிநில பகுதிகளில் எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
இவற்றை எடுப்பதற்கு விரும்பும் நிறுவனங்கள் அடுத்த மாதம் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் ஜூன் மாதம் கிணறு தோண்டும் பணியை தொடங்கலாம்.
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக மரக்காணத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை 24 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மரக்காணத்தில் இருந்து கடலூர் வரை புதுவை உள்ளிட்ட பகுதிகளையும் சேர்த்து 4 கிணறுகள் தோண்டப்படும்.
கடலூரில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில் வரை 10 கிணறுகள் தோண்டப்படும். பரங்கிப்பேட்டையில் இருந்து வேளாங்கண்ணி வரை 10 கிணறுகள் தோண்டப்படும். இவற்றில் இருந்து ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கப்படும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் மூலம் இவற்றுக்கு அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கனவே நாகப்பட்டினம் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் நிலையில் புதிதாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.