புதுவை அருகே 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான அனுமந்தை அருகே செய்யாங்குப்பம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவரது மனைவி செல்வி. கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவர்களது 16 வயது மகளை உறவினரான பாலு (26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீல் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர்.
திருமண வயதை எட்டாத சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். எனவே, திருமண வயதை நிறைவடைந்த பின்னர் திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினர்.
இதனை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். 2 வருடம் கழித்து திருமணத்தை நடத்துவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. #tamilnews