வில்லியனூர் அருகே கட்டிட காண்டிராக்டர் மின்சாரம் தாக்கி பலி
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தட்டாஞ்சாவடி புதுநகரை சேர்ந்தவர் தனயன் (வயது 34). கட்டிட காண்டிராக்டர். இவர் வில்லியனூர் பெரிய பேட் பகுதியில் ஒரு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று அந்த கட்டிடத்துக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரத்துக்கு மோட்டார் பைப் லைன் மூலம் தண்ணீர் தெளித்து கொண்டு இருந்தார்.
அப்போது மின் கசிவு ஏற்பட்டு தனயனை மின்சாரம் தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே தனயன் உடல் கருகி இறந்து போனார். மின்சாரம் தாக்கி பலியான தனயனுக்கு வசந்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை புது நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (44). கட்டிட தொழிலாளி. இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று இவர் அதே பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து ஷாஜகான் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷாஜகான் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.