செய்திகள்

தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமா? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் -திருநாவுக்கரசர்

Published On 2018-02-17 03:21 GMT   |   Update On 2018-02-17 03:21 GMT
தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக சொன்ன கருத்தின் உண்மை நிலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். அவர் மத்திய மந்திரியாக இருப்பவர். எதையும் ஆராயாமல் அவர் இப்படி பேசியிருக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன். அவரின் கருத்தில் உண்மை நிலை இருந்தால் அதை அவர் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

தீவிரவாதிகளின் பயற்சி மையங்கள் செயல்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். அப்படியென்றால் அவை எங்கு செயல்படுகிறது? எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும்.

அவர் ஆதாரம் இல்லாமல் பேசியிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அவரின் கருத்து குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு நம்முடைய கலாசார பண்பாட்டுக்குரியது. அதனை அவர் கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் சட்டம்- ஒழுங்கு சீராக இருப்பதாக துணை முதல்- அமைச்சர் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்று இருக்கிறது. இந்த ஒரு வருஷம் தாக்கு பிடித்ததே அவருக்கு சாதனை தான். இது தவிர வேறு சாதனை எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் எம்.எல்.ஏ.க்கள் எச்.வசந்தகுமார், கணேஷ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது சமீப காலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News