செய்திகள்

திருக்கனூர் அருகே அரசு பள்ளி அறை ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2018-02-11 16:50 GMT   |   Update On 2018-02-11 16:50 GMT
திருக்கனூர் அருகே பள்ளி அறை ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். பொருட்கள் எதுவும் சிக்காததால் அவர்கள் புத்தகங்களை அள்ளி சென்றனர்.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு அம்மன் கோவில் எதிரே அரசு தொடக்க பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் வகுப்பு முடிந்ததும் தலைமை ஆசிரியர் கனகமூர்த்தி பள்ளியை பூட்டி சென்றார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பள்ளியின் கிரில் கேட்டை தாண்டி உள்ளே புகுந்து தலைமை ஆசிரியரின் அலுவலக அறை பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால், பூட்டை உடைக்க முடியாததால் அருகில் உள்ள நூலக அறையின் சிமெண்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு பீரோவை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் உள்ளதா? என தேடி உள்ளனர். ஆனால், பொருட்கள் எதுவும் சிக்காததால் பீரோவில் இருந்த பாட புத்தகங்கள் மற்றும் பாடம் சம்பந்தமான சி.டி.க்களை திருடி கொண்டு சென்று விட்டனர்.

இன்று காலை அப்பகுதி மக்கள் பள்ளியின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து தலைமை ஆசிரியர் கனக மூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பள்ளிக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் இது தொடர்பாக திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் கம்ப் யூட்டர்கள் மற்றும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. கொள்ளையர்களால் பூட்டை உடைக்க முடியாததால் இந்த பொருட்கள் அவர்களிடம் இருந்து தப்பியது. #tamilnews

Tags:    

Similar News