செய்திகள்

காரைக்காலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Published On 2018-01-19 16:42 GMT   |   Update On 2018-01-19 16:42 GMT
காரைக்காலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைக்கால்:

சேலத்தை சேர்ந்தவர் முரளி (வயது 35). இவர் காரைக்கால் கோவில்பத்து பாரதியார் ரோடு, வடக்கு வீதி சந்திப்பில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.

காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். அவர் ஊருக்கு செல்ல நினைத்தார். இதனால் முடிவெட்டி விட்டு நேற்று இரவு தான் தங்கியிருந்த அறைக்கு வந்தார்.

பின்னர் அவர் குளிப்பதற்காக 2-வது மாடியில் இருந்த தனது அறைக்கு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுக்கியதில் அவர் வெளியில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது சாய்ந்தார். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் மின் துறையினர் விரைந்து வந்து மின் விநியோகத்தை நிறுத்தினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மின் கம்பியில் சிக்கி உயிரிழந்த முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மின்கம்பியை ஒட்டியபடி அஜாக்கிரதையாக மாடியை கட்டி இருந்ததால்தான் இந்த உயிர்பலி ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்று பல இடங்களிலும் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் இதை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்ல இருந்த நிலையில் வாலிபர் முரளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Tags:    

Similar News