செய்திகள்

கடையம் அருகே கணவரை கொன்ற பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-12-25 04:11 GMT   |   Update On 2017-12-25 04:11 GMT
கடையம் அருகே கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடையம்:

நெல்லை மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரன் மனைவி லட்சுமி (வயது 68). இவர்களது மகன் ராமசந்திரன். கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி சங்கரனை, தாயும் மகனும் சேர்ந்து அம்மி கல்லை போட்டும், அரிவாள்மனையால் வெட்டியும் கொலை செய்தனர்.

இதனையடுத்து லட்சுமி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர், வந்தநாள் முதல் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இவர் மிகுந்த மன உளைச்சலோடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமி வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு, தனது உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லட்சுமியின் உடல் பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லட்சுமி மனஉளைச்சலுடன் இருந்து வந்த நிலையில் உடல்நலம் பாதித்தும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவருடைய மகன் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News