செய்திகள்

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்

Published On 2017-12-25 00:28 GMT   |   Update On 2017-12-25 00:28 GMT
கன்னியாகுமரி அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் வருகிற 31-ந்தேதி முடிவடைகிறது. பருவமழை கால தொடக்கத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது.

இதன் காரணமாக வறண்டு கிடந்த ஏராளமான ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு மேலாக நிரம்பின. சில ஏரிகள் மட்டும் நிரம்பும் நிலையில் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக கன மழை பெய்யவில்லை. அடுத்து 3 அல்லது 4 நாட்கள் கன மழை பெய்தால் அனைத்து ஏரிகளும், குளங்களும் நிரம்பிவிடும்.

சென்னை வானிலை இயக்குனரக அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும்.

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணிநேரத்தில் உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் பிறகுதான் அதுபற்றி முழுமையாக கணிக்க முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News