செய்திகள்

2ஜி தீர்ப்பால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பு வராது: திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2017-12-22 09:42 GMT   |   Update On 2017-12-22 09:42 GMT
2ஜி தீர்ப்பால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

2ஜி வழக்கு காங்கிரசால் போடப்பட்ட வழக்கு அல்ல. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்தி இப்போது கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இதில் காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை விமர்சனத்துக்குள்ளானது தி.மு.க. மட்டுமல்ல. காங்கிரசும்தான். மன்மோகன்சிங் மீது புழுதிவாரி தூற்றினார்கள். பா.ஜனதா திட்டமிட்டு நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டது.

தற்போது தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றி தி.மு.க.- காங்கிரஸ் உள்ளிட்ட எங்கள் கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. இந்த கூட்டணி தொடரும். கோர்ட்டு தீர்ப்பு பா.ஜனதா தயவால் கிடைத்த தீர்ப்பு அல்ல. நியாயம், சட்டம், சாட்சி, ஆதாரங்கள் அடிப்படையில் கோர்ட்டு நியாயத்தை நிலை நாட்டியுள்ளது.

இதனால் கூட்டணி மாற்றம் என்பதெல்லாம் வி‌ஷமத்தனமான பிரசாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News