செய்திகள்

பாபநாசம் அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2017-12-16 10:18 GMT   |   Update On 2017-12-16 10:18 GMT
பாபநாசம் அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே கோவில்தேவராயன் பேட்டை கிராமத்தில் நடுத் தெருவில் வசித்து வருபவர் தமிழ்வாணன். இவருக்கு சொந்தமான செங்கல் கால்வாயில் அதே ஊரைச் சேர்ந்த இஸ்ராயர் (வயது 42). என்பவர் வேலை செய்துவந்தார். இவர் கடந்த 1.11.16-ல் அதே செங்கல் கால்வாயில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மருத்துவ அறிக்கையில் இஸ்ராயர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று தெரியவந்தது. இது குறித்து பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன், ஏட்டு மதியழகன் ஆகியோர் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவில்தேவராயன் பேட்டை மாமரத்து தெரு கிருஷ்ணமூர்த்தி மகள் உமாவும் (35), மணப்படையூர் கிராமத்தை சேர்ந்த சிட்டிபாபு (37) ஆகிய இருவரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக இஸ்ராயரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து உமாவையும், சிட்டிபாபுவையும் போலீசார் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராஜசேகர் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News