மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வாலிபர் கைது
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கிருந்து வெளி நாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.
இதனால் மதுரை விமான நிலையத்தில் எப்போதும் தீவிர கண்காணிப்பு இருக்கும். இன்று துபாய் செல்லும் விமானத்திற்கு வந்தவர்களிடம் குடியுரிமை பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார்.
அப்போது ஒரு வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட்டு என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த வாலிபர் பெருங்குடி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவரது பெயர் அப்துல் கபார் (வயது29) என்பதும், கிருஷ்ணகிரி மாவட்டம் மடப்பள்ளியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவருக்கு போலி பாஸ்போர்ட்டு கொடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.