செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் அதிக மழை - 19 மாவட்டங்களில் பருவமழை குறைவு

Published On 2017-12-12 09:40 GMT   |   Update On 2017-12-12 09:40 GMT
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 57 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. 19 மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை என்று வானிலை அதிகாரிகள் கூறினர்.

சென்னை:

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 27-ந்தேதி தொடங்கியது.

நவம்பர் மாதத்தில் அதிக அளவு மழை பெய்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி நிலவியதாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் கடலோர மாவட்டங்களிலும், சென்னையிலும் இயல்பை விட கூடுதல் அளவுக்கு மழை கிடைத்தது.


இந்த மாத தொடக்கத்தில் மத்திய மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. தொடர்ந்து ஒக்கி புயலால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் மத்திய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் இந்த கால கட்டத்தில் கூடுதல் மழை பெய்தாலும், ஈரோடு உள்பட மேற்கு மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது.

மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு குறைந்த அளவே மழை கிடைத்துள்ளது. இதுபற்றி வானிலை அதிகாரிகள் கூறும்போது, “வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக அளவு பெய்தாலும் 19 மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை” என்று தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பை விட 45 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. புதுக்கோட்டையில் 44 சதவீதமும், கோவையில் 42 சதவீதமும், திருச்சியில் 38 சதவீதமும், ஈரோட்டில் 35 சதவீதமும் மழை குறைவாக பெய்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 57 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் 38 சதவீதம், சென்னையில் 30 சதவீதம், திருவண்ணாமலையில் 27 சதவீதம், திருவள்ளூரில் 25 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

கடைசியாக வங்க கடலில் புயல் உருவாகி வட தமிழகக்தில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் சின்னம் திசைமாறி ஒடிசா சென்றதால் தமிழகத்தில் மழையே இல்லாமல் போனது.

தற்போது குமரி கடல் பகுதியில் வெளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும். 14-ந்தேதி முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News