செய்திகள்

புதுச்சேரி கல்லூரிகளுக்கு எதிராக வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2017-12-08 09:41 GMT   |   Update On 2017-12-08 09:41 GMT
புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில், பட்டமேற்படிப்பில் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, புதுச்சேரி அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

புதுச்சேரியில் உள்ள ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பட்டமேற் படிப்பில் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட 95 மாணவர்களை நீக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, புதுச்சேரி அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறையாக நடை பெறவில்லை என்றும், அவர்களை கல்லூரிகளில் இருந்து நீக்கக்கோரியும் கார்த்திகேயன், மோனிஷா, அஷ்வின் உள்ளிட்ட 28 மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

‘நீட்‘ தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர் நீதிமன்றம் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய போதும் தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கவில்லை என்றும், அதற்கு மாறாக நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுக்காதவர்களை கூடுதல் தொகையை செலுத்திய, நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 95 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களை நீக்கி விட்டு, அடுத்த கல்வியாண்டில் தங்களுக்கு சேர்க்கை வழங்கவும், இந்த ஆண்டுக்கு இடமளிக்காததால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு இழப்பீட்டை வழங்க உத்தரவிடவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய அரசு, புதுச்சேரி அரசு, 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள், செண்டாக் குழு, இந்திய மருத்துவ கவுன்சில், பல்கலைகழக மானியக் குழு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News