இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம்:
ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், நாகப்பட்டினம், ஜெகதாபட்டிணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 116 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும். படகுகள் சேதமான மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.