செய்திகள்

பெரம்பலூர்: ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2017-11-24 17:17 GMT   |   Update On 2017-11-24 17:17 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உதவியாளர், இளநிலை உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதேபோல் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது தமிழக அரசு போராட்டத்திற்கு செவி சாய்க்காவிட்டால் இப்போராட்டம் தொடர் போராட்டமாக உருவாகும் என கூறினார்.

மேலும் இப்போராட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹபிபுணிசா, செல்வமணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் தண்டபாணி, ஜெய்சங்கர், ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பு வட்டார தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் வேப்பந்தட்டை ஒன்றியத்திலுள்ள 29 ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலக பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News