செய்திகள்

98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களிடம் இருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது: அமைச்சர் பேட்டி

Published On 2017-11-24 14:59 GMT   |   Update On 2017-11-24 15:00 GMT
இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பதன் மூலம் 98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்:

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

அ.தி.மு.க.வையும், இந்த ஆட்சியையும் ஒருசிலர் கைப்பற்ற சதிதிட்டம் தீட்டினார்கள். அது தர்மம், அதர்மம் ஆகியவற்றுக்கு இடையே நடந்த போட்டி ஆகும். இந்த போட்டியில் தர்மமே தற்போது வென்று உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த கட்சியை ஒருங்கிணைத்து கட்டி காக்கும் வகையில் நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

இதன் மூலம் 98 சதவீத தொண்டர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. எதிர்கட்சிகளின் சதிக்கு ஆளாகாமல் முழுவதுமாக காப்பாற்றப்பட்டு, இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டு உள்ளது. இதற்காக கழக முன்னோடிகள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மைத்ரேயன் எம்.பி. சொன்ன கருத்துக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஏற்கனவே பதில் அளித்து விட்டார். இன்னும் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தால் கூட பேசி தீர்த்து கொள்வோம். இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் தோல்வி அடைந்த காரணத்தால் சிலர் தேர்தல் ஆணையத்தை குறை சொல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News