செய்திகள்

பால் வாங்க சென்ற போது தனியார் பஸ் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

Published On 2017-11-24 11:43 GMT   |   Update On 2017-11-24 11:43 GMT
பால் வாங்க சென்ற போது தனியார் பஸ் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை ராமநாதபுரம் அருகே உள்ள ஒலம்பஸ் நடராஜ தேவர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). முன்னாள் ராணுவ வீரர்.

இவர் இன்று அதிகாலை காலை 5.30 மணியளவில் பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். பின்னர் ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள பால்கடைக்கு செல்வதற்காக கோவை- திருச்சி ரோட்டில் ஒலம்பஸ் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.

ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் பஸ்களை டிரைவர்கள் நிறுத்துவது வழக்கம். அப்படி நிறுத்தப்பட்டு இருந்த ஒரு பஸ்சை டிரைவர் ஒருவழிபாதையில் ஓட்டி வந்தார்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த ராமசாமி மீது பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் ராமசாமி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவஇடத்திலேயே ராமசாமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து ராமசாமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News