செய்திகள்

தோழியின் அண்ணன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி மாயம்

Published On 2017-11-24 11:24 GMT   |   Update On 2017-11-24 11:24 GMT
தோழியின் அண்ணன் திருமண நிகழ்ச்சிக்கு ஸ்கூட்டியில் சென்ற பிளஸ்-1 மாணவி மாயமானார்.

புதுச்சேரி:

புதுவை தேங்காய்திட்டு வடக்குபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் எழிலரசி (வயது 16). இவர், முதலியார்பேட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலை புதிதாக ஸ்கூட்டி வாங்கினார். சம்பவத்தன்று ஏழுமலை ஸ்கூட்டியை வீட்டில் நிறுத்தி விட்டு சைக்கிளில் வேலைக்கு சென்றார்.

அப்போது எழிலரசி ஸ்கூட்டியை எடுத்து கொண்டு தோழியின் அண்ணன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறி சென்றார்.

ஆனால், வெகுநேர மாகியும் எழிலரசி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் எழிலரசி இல்லை.

இதையடுத்து ஏழுமலை தனது மகள் ஸ்கூட்டியுடன் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான எழிலரசியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News