செய்திகள்

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Published On 2017-11-23 13:15 GMT   |   Update On 2017-11-23 13:16 GMT
இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ள நிலையில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:

அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சின்னம் மீண்டும் கிடைத்துள்ள நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர், துணை முதல்வர் வருகை தந்தனர். அவர்களை அடுத்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்தடைந்தனர்.

அப்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்தார். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.



பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இருவரும் சென்றனர். அங்கு ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News