செய்திகள்

திருபுவனையில் கார் மீது லாரி மோதல்: என்ஜினீயர் பலி

Published On 2017-11-19 14:34 GMT   |   Update On 2017-11-19 14:34 GMT
திருபுவனையில் கார் மீது லாரி மோதியதில் புதுவை என்ஜினீயர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருபுவனை:

புதுவை வீமகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் சபரிநாத் (வயது23), என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். நேற்று காலை இவரும், இவரது நண்பர்களான சதீஷ், சுரேஷ்குமார், சரவணன், சுரேஷ் ஆகிய 5 பேரும் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலைக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

பின்னர் சுற்றுலா முடிந்து இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். காரை சபரிநாத் ஓட்டி வந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் கார் திருபுவனை மின்துறை அலுவலகம் அருகே வந்த போது திருவண்டார்கோவிலில் இருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொருட்கள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இதில் காரை ஓட்டி வந்த சபரிநாத் பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் சிறுகாயங்களுடன் தப்பினர். இதையடுத்து சபரிநாத்தை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் சபரிநாத் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசங்கர் வல்லட், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News