செய்திகள்

மதுரை அருகே ஆலாத்தூரில் வியாபாரி அடித்துக் கொலை: கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2017-11-19 11:54 GMT   |   Update On 2017-11-19 11:54 GMT
மதுரை அருகே உள்ள ஆலாத்தூரில் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதூர்:

மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் அருகே உள்ள ஆலாத்தூரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 50). இவர் அந்தப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.

நேற்று மாலை இவரது கடைக்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த 3 பேர் சிகரெட் வாங்கினர். பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்கும், பிச்சைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து பிச்சையை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வியாபாரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பிச்சை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்தர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிச்சையின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி ஆலாத்தூர் கிராம மக்கள் இன்று காலை கடச்சனேந்தல் -ஊமச்சிகுளம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

வியாபாரி கொலை சம்பவம் காரணமாக ஆலாத்தூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News