சின்னமனூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
தேனி:
சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஞானமுருகன் மனைவி ராஜரத்தினம் (வயது 38). சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.
உடனே சுதாரித்த ராஜரத்தினம் செயினை தனது கையில் பிடித்துக் கொண்டார். ஆனால் கொள்ளையன் செயினை அறுத்ததால் 3 பவுன் செயின் அவன் கையில் சிக்கிக் கொண்டது.
அதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். இது குறித்து ராஜரத்தினம் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் ஏஜென்சியில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கம்பெனி மோட்டார் சைக்கிளில் கடைகளில் வசூல் செய்து கொண்டு இருந்தார். ஒரு கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றார்.
இதே போல் சின்னமனூர் பொட்டிமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (47). சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். அதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
இந்த 2 திருட்டுகள் குறித்தும் தனித்தனியே சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூரில் அடுத்தடுத்து நடக்கும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.