செய்திகள்

டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

Published On 2017-11-17 10:02 GMT   |   Update On 2017-11-17 10:02 GMT
டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் கென்னடி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகள் காஞ்சனா (வயது 21). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தேர்வுக்கு படிக்காமல் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு திலாஸ்பேட்டையில் உள்ள தனது பெரியம்மா தனஞ்ஜெயம்மாள் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்து காஞ்சனா தங்கினார்.

ஆனாலும், பெற்றோர் கண்டித்ததை ஏற்க முடியாமல் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று மாலை தனஞ்ஜெயம்மாள் வெளியே சென்றிருந்த நேரத்தில் காஞ்சனா வீட்டின் மின்விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். பின்னர் சிறிது நேரம் கழித்து தனஞ்ஜெயம்மாள் வீட்டுக்கு வந்த போது, காஞ்சனா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காஞ்சனாவை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காஞ்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News