செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

Published On 2017-11-13 11:56 GMT   |   Update On 2017-11-13 11:56 GMT
சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 45). இவருடைய மனைவி கலைச்செல்வி (40). இவர்களது மகள் ‌ஷர்மிளா(11), மகன்கள் சாரதி(9), அரவிந்தன்(4).

ஜெயராஜ் குடும்பத்துடன் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கையில் கொண்டு வந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் அவர்களை உடனடியாக தடுத்து மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

நாங்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 2 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தோம். தற்போது நிலம் கொடுத்தவர்களின் உறவினர்கள் எங்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வகின்றனர்.

இதனால் நாங்கள் இது குறித்து கெங்கவல்லி போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று காலை எங்கள் நிலத்திற்கு செல்லும் வழியில் முட்களை வெட்டி போட்டு தடுத்தனர். இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News