செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குப்பை பொறுக்குவதுபோல் நடித்து கொள்ளை: 6 பேர் கைது

Published On 2017-11-13 08:58 GMT   |   Update On 2017-11-13 09:05 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குப்பை பொறுக்குவதுபோல் நடித்து கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

அம்பத்தூர் தொழிற்பேட் டையை அடுத்த மண்ணூர் பேட்டையில் கடந்த சனிக்கிழமை கோபால கண்ணன் என்பவரை மர்ம கும்பல் கத்திமுனையில் வழிமறித்து பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த சதிஷ், சின்ன சிவா, சிவா, சூர்யா என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தரமணி பஸ் நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பகல் நேரங்களில் குப்பை பொறுக்குவது போல் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பின்னர் இரவில் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களுக்கு சந்தோஷ் குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் உதவி செய்து வந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 13 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அயனாவரம், வி.பி. காலனியை சேர்ந்தவர் புகழ். இவர் வீட்டு முன்பு செல்போனில் பேசியபடி நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் புகழின் செல்போனை பறித்து தப்பினர்.

அந்த நேரத்தில் ரோந்து வந்த அயனாவரம் போலீசார் 3 சிறுவர்களையும், மடக்கி பிடித்தனர். அவர்கள் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்றும் அயனாவரம், ஓட்டேரி பகுதியில் தொடர்ந்து செல்போன் பறித்து வந்ததும் தெரிந்தது.

Tags:    

Similar News