செய்திகள்

மரணத்திலும் பிரியாத தம்பதி: கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பலி

Published On 2017-11-09 10:13 GMT   |   Update On 2017-11-09 10:13 GMT
அணைக்கட்டு அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் பெரியஊனை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு:

அணைக்கட்டு அருகே பெரியஊனை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது70). மண்பாண்ட தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (65).

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மல்லிகா சிகிச்சை பெற்று வந்தார்.

மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து சந்திரன் சரியாக சாப்பிடாமல் சோகத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென்று இறந்துவிட்டார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகாவை அன்று மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

அவர் கணவர் சந்திரன் உடல் அருகில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதனால் இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மல்லிகா இறந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவருடைய உடலும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு சந்திரனின் உடல் அருகில் வைக்கப்பட்டது. நேற்று மாலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சந்திரனின் உடல் புதைக்கப்பட்டது. மல்லிகாவின் உடல் எரிக்கப்பட்டது.

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் பெரியஊனை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News