செய்திகள்

ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் சாட்டையடி நிகழ்ச்சி

Published On 2017-11-08 17:05 GMT   |   Update On 2017-11-08 17:05 GMT
ராசிபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள அத்திப்பலகானூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நேற்று காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.

இதன்பின்னர் பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி கோவில் அருகே நடந்தது. அப்போது கோவில் பூசாரிகள், பக்தர்கள் மீது சாட்டையால் அடித்தனர். வேண்டுதலை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாட்டையடி வாங்கினார்கள். சிலர் தங்களின் கைக்குழந்தைகளுடன் நின்று சாட்டையடி வாங்கினர்.

இந்த கோவில் திருவிழாவின்போது நடைபெறும் சாட்டையடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கினால் பில்லி, சூனியம் மற்றும் நோய்கள் நீங்கும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அத்திப்பலகானூர், கட்டனாச்சம்பட்டி, ராசிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அதன்பிறகு பக்தர்கள் மாரியம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலையில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், மாலையில் அலகு குத்துதல் போன்றவையும், நாளை (வியாழக்கிழமை) உடற்கூறு வண்டி வேடிக்கை, எருதாட்டம் நிகழ்ச்சிகளும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு கம்பம் எடுத்தலும், 11-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News