அருப்புக்கோட்டை அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: 4 பேர் கைது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் வாசலில் 6 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மல்லாங்கிணறு போலீசார் ரோந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த கும்பல் காரில் தப்பி ஓட முயன்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றனர்.
இதில் 4 பேர் சிக்கினர். மற்ற 2 பேர் காரில் தப்பி சென்றுவிட்டனர். பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து கத்தி, செல்போன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. போலீசார் அங்கு வந்ததால் ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் இருந்து தப்பியது.
இதனை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை தத்தனேரியை சேர்ந்த செந்தில்குமார் (28), பாண்டியராஜன் (25), விரகனூர் முகேஷ்கண்ணன் (19), சிந்தாமணி சரவணக்குமார் (28) என தெரியவந்தது. தப்பிய ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.