செய்திகள்

திருவண்ணாமலை அருகே இளம்பெண் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-10-22 13:23 GMT   |   Update On 2017-10-22 13:23 GMT
திருவண்ணாமலை அருகே இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு சூ.வாழாவெட்டி கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இதன் அருகே இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை மற்றும் உடலில் அடிப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் வெறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாயை வரவழைத்து அதன் உதவியுடன் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

பிணம் கிடந்த இடத்தை மோப்பம் பிடிக்க நாய் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் எந்த தடயங்களும் சிக்கவில்லை.

இதையடுத்து பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பெண் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News