புதுவையில் வங்கி பெண்அதிகாரியிடம் பணப்பை பறிப்பு
புதுச்சேரி:
வடமாநிலத்தை சேர்ந்தவர் ரேணுசரன் (வயது29). இவர் உப்பளம் நேதாஜி நகரில் பாப்பம்மாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி புதுவை தேசிய வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று புதுவை செயிண்ட்பசார் தெருவில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு தனது காரை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு சாப்பிட நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ரேணுசரன் தோளில் மாட்டி இருந்த லெதர் பேக்கை பறித்தனர். ரேணுசரன் திருடன்... திருடன் என கூச்சலிடுவதற்குள் மர்ம நபர்கள் லெதர் பேக்குடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அந்த லெதர் பேக்கில் ரூ.2.500 ரொக்க பணம், விலை உயர்ந்த செல்போன், கார் சாவி, வீட்டுசாவி ஆகியவை இருந்தது.
இதுகுறித்து ரேணுசரன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குபதிவு செய்து பணப்பையை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.