அய்யர் பங்களாவில் வீடு புகுந்து நகை- பணம் கொள்ளை
மதுரை:
மதுரை அய்யர் பங்களா இமானுவேல் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன் (வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதி.
இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி, வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி சகோதரி குடும்பத்துடன் சவுந்தரபாண்டியன், கடந்த 14-ந் தேதி ஐதராபாத் சென்றார்.
19-ந் தேதி இரவு அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக தல்லாகுளம் போலீசில் சவுந்தரபாண்டியன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
கருப்பாயூரணி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (42). இவர் 17-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நேரத்தில் யாரோ ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வெள்ளி அரைநாண் கொடி மற்றும் ரூ. 3 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீர் நகர் காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (34), பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையின் மேற்கூரையை பிரித்து யாரோ உள்ளே புகுந்து செல்போன்களை திருடிச் சென்றனர்.
இது குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி செல்போன்கள் திருடியதாக பைக்காரா வாசு (20), சண்முகராஜா ஆகியோரை கைது செய்தனர்.