செய்திகள்

திருமங்கலம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2017-10-06 11:53 GMT   |   Update On 2017-10-06 11:53 GMT
திருமங்கலம் அருகே மணல் லாரி மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணியைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரது மகன் நாகராஜ் (வயது 28), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று இரவு 8 மணிக்கு கொம்பாடி கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு நாகராஜ் சென்றார். அங்குள்ள சாலையில் அவர் கடந்து சென்ற போது அந்த வழியே மணல் லாரி வந்தது.

அந்த லாரி எதிர்பாராத விதமாக நாகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கூடக்கோவில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

அப்போது நாகராஜின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் திரண்டு விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கூறினர்.

தொடர்ந்து அவர்கள் அந்தப்பகுதியில் மறியலும் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News