செய்திகள்
கோவை அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பூ வியாபாரி பலி
கோவையில் அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பூ வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை எருக்கம்பெனியை சேர்ந்தவர் மணி கண்டன்(வயது 30). இவர் தொண்டாமுத்தூரில் பூக்கடை நடத்தி வந்தார். இன்று காலை கடைக்கு செல்வதற்காக இவர் ஆனைகட்டியில் இருந்து கோவை காந்திபுரத்துக்கு வந்த ஒரு அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மணிகண்டன் படிக்கட்டில் தொங்கிய படி பயணித்ததாக கூறப்படுகிறது. பஸ் லாலி ரோடு சந்திப்பு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக பஸ் படிக்கட்டில் இருந்து மணி கண்டன் கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பஸ் டிரைவரான கணபதியை சேர்ந்த ரவிக்குமார் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.