செய்திகள்

பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே 4 கடைகளில் கொள்ளை

Published On 2017-09-30 16:55 GMT   |   Update On 2017-09-30 16:55 GMT
பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்றிரவு 4 கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்றிரவு பல்வேறு கடைகளில் பூஜைகள் நடத்தி விட்டு ஊழியர்கள் கடைகளை பூட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை  பஸ் நிலையம் அருகே உள்ள டயர் கடை, சலூன் கடை, மளிகை கடை, செல்போன் கடை ஆகிய 4 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கடைகளுக்குள் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தன.

சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. நள்ளிரவு மர்மநபர்கள் கடைகளுக்குள் புகுந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News