செய்திகள்

தமிழக அரசு பதவி விலகக்கோரி இந்திய கம்யூ. 3-ந்தேதி ஆர்ப்பாட்டம்: முத்தரசன்

Published On 2017-09-25 06:38 GMT   |   Update On 2017-09-25 06:38 GMT
ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் கூறிய தமிழக அரசு பதவி விலகக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அக். 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முத்தரசன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது சசிகலாவுக்கு பயந்து இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னதாக கூறியுள்ளார். இதே நேரத்தில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயலலிதாவை பார்த்தார். பின்னர் அவர் ஓரிரு நாளில் உடல்நலம் சீராகி ஜெயலலிதா பணிக்கு வருவார் என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் கவர்னரும் பொய் கூறி உள்ளார் என்பது தெளிவாகி உள்ளது. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும்.


இதனை வலியுறுத்தி தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

‘நீட்’ தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது பெயரைகூறி ஆட்சி செய்யும் தமிழக அரசு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் வாய்மூடி ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கைப்பற்றி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News