மதுரையில் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
மதுரை:
மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை இமானுவேல் நகரை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் சிவநிஷாந்த் (வயது 19), கல்லூரி மாணவர்.
சம்பவத்தன்று இவரது தாய் வெளியூர் சென்றுவிட்டு ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு வந்தார். தாயை அழைத்து செல்வதற்காக சிவநிஷாந்த் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
ஆரப்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவநிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் பலியான சிவநிஷாந்த் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்று உள்ளார். அதே நேரத்தில் தலைக்கசவத்தை மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் வைத்து சென்றுஉள்ளார். அதை அணிந்து சென்றிருந்தால் உயிர்ப்பலியை தவிர்த்து இருக்கலாம் என மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.