செய்திகள்

தமிழக அரசின் செயல்பாடுகளில் பா.ஜ.க. துணை நிற்பதை பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்துவோம்: டி.ராஜா எம்.பி.

Published On 2017-09-20 03:10 GMT   |   Update On 2017-09-20 03:10 GMT
தமிழக அரசின் செயல்பாடுகளில் பா.ஜ.க. துணை நிற்பதை பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று டி.ராஜா எம்.பி. தெரிவித்தார்.
சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்துள்ள முடிவு பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு புறம்பான முடிவு. தமிழகம் பெரும் அரசியல் நெருக்கடிக்கு உட்பட்டு உள்ளது. அரசியல் ஸ்திரமற்ற தன்மை தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் நிர்வாகம் நிலை குலைந்து போயிருக்கிறது.

இதற்கு மத்திய பாரதீய ஜனதா அரசு தான் காரணம். மத்திய அரசின் அழுத்தத்தினால் ஜனநாயக விரோத செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. கவர்னர், ஜனாதிபதியின் விருப்பத்திற்கு உட்பட்டு செயல்படும் நபர். கவர்னர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

இப்படி இருக்கும்போது, தமிழக கவர்னர் முதல்-அமைச்சரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இது பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சினை. தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு பா.ஜ.க. பின்னணியில் உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாராளுமன்றம் கூடும்போது தமிழக செயல்பாடுகள் விவாதிக்கப்படும். தமிழக அரசின் செயல்பாடுகளில் பாரதீய ஜனதா கட்சி துணை நிற்பது அம்பலப்படுத்தப்படும். மக்கள் தீர்ப்பு தான் ஜனநாயகத்தில் முக்கியமானது. தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள். பல அரசியல் அனுபவங்களை கடந்து வந்துள்ளனர். ஜனநாயக விரோத செயல்கள் நடப்பதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நல்ல பாடத்தை உரியவர்களுக்கு வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News