search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ராஜா"

    • நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், பாராளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது.
    • பா.ஜ.க ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன.

    கோவை:

    கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், பாராளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது.

    பாராளுமன்ற பட்ஜெட்டை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தபோது இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்டாகவும், செல்வந்தர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. ஏழை மக்களின் வாழ்வாதார நிலை உயர ஒதுக்கீடு இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன.

    அதானி ஊழல் மக்களிடம் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு பிரதமர், நிதி அமைச்சர் தான் பொறுப்பு. அதானி பெயரை சொல்லி விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் அனுமதிப்பதில்லை. அதானி ஊழல் சாதாரண ஊழல் இல்லை.

    எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ-யில் பெருமளவு நிதி பெற்று மோசடி செய்துள்ளது மக்கள் பணம். கடந்த காலங்களில் ஊழல் பெரிதளவில் பேசப்பட்டபோது நிதி அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தற்போது மவுனம் சாதிக்கின்றனர்.

    மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்றன. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது. தற்போது சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒன்றும் புதியது அல்ல. முன்னதாக எல். கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் கவர்னர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். பா.ஜ.க நியமிக்கும் கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா. முத்தரசன் கூறும்போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க அரசையும், இடதுசாரி கட்சிகளையும் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கட்சியில் அடிமையாக இருந்து வந்தவர். பேனா நினைவு சின்னம் சர்ச்சை தேவையற்றது. ரூ.3 ஆயிரம் கோடிக்கு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததற்கு விவாதம் எழுப்பாதவர்கள். பேனா சிலைக்கு பிரச்சினை எழுப்பி வருகின்றனர். கலைஞர் தனது எழுத்தாற்றல் மூலம் பல புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டவர். ஜனாதிபதி கோவையில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பது நல்லது என்றார்.

    இதனை தொடர்ந்து வடகோவை குஜராத் சமாஜ் கூட்டரங்கில் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொது செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×