செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கலா?: பாளை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2017-09-13 17:09 GMT   |   Update On 2017-09-13 17:10 GMT
பாளை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை:

சிறைச்சாலைகளில் செல்போன், சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை ஜெயிலுக்குள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் ஜெயில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் சிறைகளுக்குள் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை கண்டுபிடிக்கும் விதமாக சிறைச்சாலைகளில் அடிக்கடி அதிரடி சோதனை நடத்த தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டு சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யும், மாநகர போலீஸ் கமி‌ஷன ருமான கபில் குமார் சரத்கார் பாளை மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்த இன்று உத்தரவிட்டார். இதையடுத்து துணை போலீஸ் கமி‌ஷனர் சுகுணாசிங் தலைமையில் உதவி கமி‌ஷனர் விஜயகுமார், 5 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50 போலீசார் இன்று காலை அதிரடியாக பாளை மத்திய சிறைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் 10 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு பிளாக்குகளுக்கும் சென்று செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா? எங்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பாளை மத்திய சிறை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் மற்றும் சிறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

கைதிகள் தங்கியிருக்கும் அறைகள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறை, சமையல் அறை உள்பட அனைத்து பகுதியிலும் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை நடந்தது. அதில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை.

சமீபத்தில் பாளை மத்திய சிறைக்கு வந்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ‘பாளை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் 100 சதவீதம் புழக்கத்தில் இல்லை’ என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News