மயிலாப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
சென்னை:
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் சென்னை மாநகராட்சி 125-வது வட்டத்துக்கு உட்பட்ட செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது.
இங்கு நேற்று இரவு 7.30 மணியளவில் வாலிபர் ஒருவர் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் துளசி (30) என்பது தெரியவந்தது. திருமணம் ஆகாத இவர் சுகாதாரத் துறையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் துளசி விஷம் குடித்து மயங்கி கிடந்த மாநகராட்சி அலுவலகத்தின் மாடியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த காமாட்சி (35) பிணமாக கிடந்தார். அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவரது உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் துளசியும் காமாட்சியும் காதலித்து வந்தது தெரியவந்தது.
கணவர் இறந்த பின்னர் அவரது வேலை காமாட்சிக்கு கிடைத்துள்ளது. இதேபோல தந்தை இறந்த பின்னர் துளசிக்கு துப்புரவு பணியாளராக வேலை கிடைத்துள்ளது.
காமாட்சிக்கு குழந்தை இல்லாத நிலையில் திருமணமாகாத துளசியுடன் நெருங்கி பழகி உள்ளார். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் தினமும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் துளசிக்கு வீட்டில் பெண் பார்த்துள்ளனர். அப்போது காமாட்சியுடனான காதலை துண்டித்து விடுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் மனம் உடைந்த துளசி, இதுபற்றி காமாட்சியிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது சேர்ந்து வாழ முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை இருவரும் எடுத்துள்ளனர். அதன் பின்னரே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மயிலாப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.