செய்திகள்

சட்டத்தை மீறும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2017-09-04 13:22 GMT   |   Update On 2017-09-04 13:22 GMT
அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் அரசியல் கட்சியோ கட்சியின் பிரதிநிதியோ தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறியிருந்தது. மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அரசியல் கட்சிகளின் பதிவை அங்கீகரிக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறதா, இல்லையா? என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
Tags:    

Similar News