செய்திகள்

திருவாரூரில் 7 வீடுகளில் தீ விபத்து; ரூ.9 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2017-08-28 16:06 GMT   |   Update On 2017-08-28 16:06 GMT
திருவாரூர் குளந்தாங்குளம் கீழ்கரை பகுதியில் உள்ள குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
திருவாரூர்:

திருவாரூர் குளந்தாங்குளம் கீழ்கரை பகுதியில் ஏராளமான குடிசை வீடுகளில் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் குமார் என்பவரது வீட்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதில் ராமதாஸ், கோபிநாத், மாரியப்பன், ரவி, ஆறுமுகம், சுந்தர் ஆகியோரின் வீடுகளும் எரிந்தது.

இது பற்றி திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்த போதிலும் வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, மற்றும் நகை-பணம் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் பொது மக்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர்.

இந்த தீ விபத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரண உதவி பொருட்களை வழங்கினர். இந்த தீ விபத்து தொடர்பாக திருவாரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News