செய்திகள்

ஆற்காடு அருகே தொழிலாளி அடித்துக் கொலை

Published On 2017-08-23 09:47 GMT   |   Update On 2017-08-23 09:47 GMT
ஆற்காடு அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள மேல்நெல்லி கிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 65), விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கலவைக்கு வந்து விட்டு மாலையில் மேல்நெல்லி கிராமத்திற்கு சென்றார். அப்போது சேட்டு மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த குப்புசாமி (65) மற்றும் சிலரை பற்றி சேட்டு ஆபாசமாக திட்டி பேசியதாக தெரிகிறது. இதில் மற்றவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். குப்புசாமி மட்டும் அங்கு நின்றிருந்தார். அவரை சேட்டு தொடர்ந்து திட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி சேட்டுவை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த சேட்டுவின் தலையின் பின்பக்கத்தில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சேட்டுவை வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறிதுநேரத்தில் சேட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேட்டுவின் மனைவி பாலகுஜம், கலவை போலீசில் புகார் கொடுத்தார். கலவை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சேட்டுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து குப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News